நினைவுகளில் நீ நிதம்
புதிதாய் பூத்துக்கொண்டேயிருக்கிறாய்
நிச்சலனப் பொழுதுகளின் காது மடல்களை
நீவி விட்டுக்கொண்டுமிருக்கின்றாய்
நாசியரும்புத் துளைகளில்
நறுமணத் தென்றல் வீசுகிறாய்
கடுங்கோடையின் காலை வெம்மைகளில்
கற்பனை சாமரம் வீசுகின்றாய்
நிழல் தேடுமென் நேரப் பங்கீடுகளில்
நீளப் பந்தலிடுகிறாய்
இருந்துமெனை அவ்வப்போது
உலர் உதடுகளால் உச்சாடனம் செய்கிறாய்
கனல் பார்வைகளால்
களி நடனம் புரிகின்றாய்
எனது ஏக்கமும் தாக்கமும் நீயாக
இதயக் கூறுகளில்
இருவேறு உணர்வுகளும் படிய
இயல்பினை மீட்க வழியின்றி
உன்னிடமே சரணாகின்றேன்
ரட்சிப்பாயா
No comments:
Post a Comment