விழிப்பார்வைகள் மங்கி
வெளிச்சப் புள்ளிகள் தேய
இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான்
உணர்ச்சிகள் ஒன்றிணைந்து
நாசி, செவி வழியே
நிகழ்வுகளை உற்று நோக்கிக்கொண்டிருந்தன
தொலைவில் தடதடத்த
மோட்டார் வாகனச் சத்தமும்
வழக்கமாய் அடுத்திருக்கும் வீட்டில்
தெருவதிரக் கத்திக் கொண்டிருக்கும் அவனின் குரலும்
அம்மா வென ஓங்காரமிட்டழைத்துக் கொண்டிருக்கும் அஞ்சலிக்குட்டியின் அழுகையும்
தெருமுகனையில் திண்ணையில்
வாசம் செய்திருக்கும்
காமாட்சிப் பாட்டியின் வெற்றிலையிடிக்கும் சங்கீதமும்
ஊரின்னும் அடங்கும் வேளை
வரவில்லையென பறைசாற்றியது
அத்தனையும் தராத மன அழுத்தத்தை
அவன் மனைவியின் மௌனம்
அவனுள் தருவித்துக் கொண்டிருந்தது
கை நீட்டி அவளது செழுகன்னத்தைத் தடவியபோது
வழிந்திருந்த நீர்த்திவலைகள்
தனது பார்வை குறைபாட்டினையெண்ணி
அவள் தவிப்பதையுணர்த்தி
தனது விழியிருளின்
அகலொளியாயிருப்பாளென
சொல்லாமல் சொல்லியது
No comments:
Post a Comment