Tuesday 16 December 2014

வானம் கருமையடையத் தொடங்கியிருந்தது.
















வலிமிகுந்த கணங்களிலொன்று
மடிமீது வீழ்ந்திருந்தது

சற்றுமுன்னர்தான்
சந்தோஷத்தின் சாம்ராஜ்யத்திலவன்
வீற்றிருந்தான்

உடையுதறி எழுவதற்குள்
உள்ளும் அதன் ஜ்வாலைகளை
பரப்பத் தொடங்கியிருந்தது

விரல் நுனிகளிலது
அழுக்காறாகவும்
விழி முனைகளில்
ஆற்றாமையாகவும்
வடியத் தொடங்கியிருந்தது

இருப்பை இறுகப் பற்றிக்கொள்ள எத்தனித்ததில்
இருக்கைகளில் தீப்பற்றி
கால்கள் கரைந்தொழுகத் தொடங்கின

அன்புக் குளத்திலமிழ்ந்து
தற்காத்துக்கொள்ளத் துடித்தவனின் பார்வைக்கு
தற்சமயம் அத்தனையும்
தூரத்துக் கானலாகவே தெரிந்தன

அடுத்த நொடியே
பெருமழையொன்று பெய்யக்கூடுமெனும்
பேராசையுடன்
நிகழ்காலத்திற்கும்
எதிர்காலத்திற்குமாக
நீச்சலடித்துக் கொண்டிருந்தான்


வானம் கருமையடையத் தொடங்கியிருந்தது..!

No comments:

Post a Comment