தடதடத்த இரயிலின் சத்தத்தில்
திடுக்கிட்டெழுந்து
தன்னவளைக் கூவியழைத்தபோது உணர்ந்தான்
தனித்திருப்பதையும்
சப்தித்தது இரயிலல்ல,
மின்விசிறியெனவும்..
ஒவ்வோர் இரவிலும்
தண்டவாள ஓசைகேட்டு
உருண்டுவந்து ஓட்டி
கரங்களுள் கரைபவளைப் பிரிந்த
ஒற்றையிரவிலேயே
தான் உறக்கமின்றி தவிப்பதையுணர்ந்து
அவளையழைக்க கைபேசியெடுத்தவன்
உறக்கத்திலெழுப்புதல் தவறென
ஒத்திவைத்தான்
இரவுமுழுதும்
எண்ணற்ற கவிதைகளை
எழுதியும், வாசித்தும் கழித்தவன்
இறுதியில் எப்படியோ
தன்னிலை மறந்து போனான்
காலையிலெழுந்தவன்
கடமைகளில் தன்னை மூழ்கவைத்து
மாலையில் வீடு திரும்பி
கதவைத் திறந்தவளைக் கண்டதும்
வாடி வண்ணமிழந்த மலர்முகம்
இரவில் உறங்காது
தன்னைப்போல் தவித்திருந்ததையுணர்ந்து
வாரியணைத்து
முத்தமழை பொழியத் தொடங்கினான்..!
இன்றையயிரவின்
தண்டவாள சத்தத்திற்காய்
காத்திருக்கத் தொடங்கியது
இருவர் மனதும்..!
No comments:
Post a Comment