Sunday 31 August 2014

காத்திருக்கும் குருவி



சொல்லிக்கொண்டிருந்த கதையில்
சிறிது நிறுத்தி இடைவெளி கொடுத்து
முன்னங்காலால் மூக்கைச் சொரிந்தபின்
குளிருக்கு ஒதுங்கியிருந்த குருவியிடம்
தணலில் சிக்கிய ராஜகுமாரனின்
தவிப்பினைப் பற்றிச் சொன்னது

விருப்பமில்லா நிலையிலும்
பெருகும் மழைக்குளிரில்
பறக்கவியலாது
செவியிலொன்றை மட்டும் கொடுத்திருந்த குருவியிடம்
உற்சாகமில்லையென்பதை
உணராமலிருந்தது

ஊடுகுளிரில் உளம்வரை சிலிர்த்தபடியிருந்த குருவிக்கு
உதவும் எண்ணமில்லாது
தனதன்பை வெளிக்காட்டும்
தற்பெருமை கதையைச் சொல்லி
தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தது

குருவி தான் பறந்துபோகும் நிமிட வரவுக்காக
காத்துக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment