எத்தனை இயலாமலிருந்தாலும்
எந்தன் தேவைகளை கவனிப்பதில்
என் தாயினுக்கு நிகராயவள்
அன்றும் அப்படியே,
அதிகாலை குளிர் நீரில் குளித்து
ஆலயம் சென்று வழிபட்டு வந்தவளின்
உடல் நோவு கண்டு
உற்சாகம் குன்றியிருந்தாள்
ஆயினும் என்மேல்
அக்கறை கொண்டவளாதலால்
அடுப்படி வேலையில்
அமிழ்ந்திருந்தாள்.
இரவு படுக்கையில்
என்னருகேயவள்
கால் வலியென
முனகிக் கொண்டிருந்தாள்.
கால்வலி கைவலியென
நான் கருதும் முன்னரே
கால் பிடித்துவிட, கை பிடித்துவிட
துடிப்பவள்
அவள் முனகுதல் கண்டு
காலைத் தொட்ட வினாடி
பதறிக் காலை
இழுத்து மறைத்துக் கொண்டாள்.
எனினும் விடாது
தென்னமரக்குடி எண்ணையெடுத்து
தடவி பிடித்து விட்டு
வலி குறைந்ததென அவள் உணர்த்திய பின்புதான்
உறங்கினேன்
நாகரிகம் வளர்ந்து
நாடு மாற்றுபாதையில் போவதாய் சொன்னாலும்
கண்கலங்கியபடியெனை
கட்டிக்கொண்டவளின்
காதல் உணர்த்தியது இல்லையென்று..!
No comments:
Post a Comment