பாவ புண்ணிய பங்கீடுகளின்பால்
நம்பிக்கையற்றிருந்தவனின் நடைபாதையில்
தோள் பற்றியெழும்பிய
ஆதரவுக்கேங்கிய உறவுகளின் கணக்கோ
எதிர்பார்ப்பை நிறைவேற்றாத குற்றத்திற்காய்
எள்ளி நகையாடி
தூற்றிப் பொருமியிருந்த
தூய உள்ளங்களின் எண்ணிக்கையோ
வைத்திருக்கவில்லையென
குற்றம் சாட்டப்படிருந்ததையெண்ணி
உணர்ச்சிகள் மரத்திருந்த மனதை
அடுக்களையாக்கி
உற்பத்தி செய்யப்பட்ட
உஷ்ணக்காற்றின் கீற்றுகளை
நீண்ட பெருமூச்சுகளாக்கி
உதிர்த்தவனின் நாசித்துளைகளின் சீற்றம்
புறக்காட்டை சூடேற்றாதிருக்க
தனக்குள் அமிழ்த்தி
தனிமையைச் சுவைத்தபடி
பயணத்தை தொடர்ந்திருந்தான்
உறவுகளால் ஒதுக்கப்பட்ட ஒருவன்..!
No comments:
Post a Comment