முரண்டு பிடித்தபடி
மூலையில் முடங்கியிருந்தாள்.
நாளையென் பயணத்தை
நயமாய் உரைத்திடத்தான் முயன்றேன்
ஒற்றையிலெனையிருத்தி
ஊர் சுற்றுகிறாயென பகர்ந்து
கண்களில் ஈரங்கசிய
மனம் கனத்திருந்தாள்.
ஆசுவாசப்படுத்தலில்
எடுத்த முயற்சிகளை
அணங்கவள் எடுத்து
இடுப்பில் சொருகியபடி
உண்ணா நோன்பினைக் கடைபிடித்து
காந்தியை கௌரவித்தாள்
வீம்புக்கு நானும்
வேண்டாம் உணவென்று சொல்லி
எனக்கொரு மூலையை
எடுத்துக் கொண்டேன்.
அதுவரை போராட்டத்தில்
அவளுக்கு வெற்றியாயிருந்தும்
அந்த நொடி முதல் தராசு
என்பக்கமானது.
என்மேலிருக்கும் அன்பிலும் அக்கறையிலும்
என்னைத்தவிர
அவள் எதையும் விட்டுக்கொடுப்பாளென
எனக்குத் தெரிந்ததுதானே!
No comments:
Post a Comment