Sunday 30 August 2015

நான் நானாக

























மருதாணியிட்ட கரங்களில்
பூத்த செவ்வழகோடு
விழி பொத்தி
மென்பாரம் முதுகிலழுந்த
சங்கு கழுத்தை தோளிருத்தி
கனியிதழால் செவிமடலுரசி
பிறமொழியில்
அம்மூன்று வார்த்தையை உதிர்த்தாள்

வானெங்கும் விண்மீன்கள் எனை நோக்கி
வர்ணப்பூக்களை சொரிந்தன
மேனியெங்கும் மலர்த்தென்றல்
தழுவி நழுவிப் போனது
பூலோகமுழுமையும்
மலர்ச்சோலையாய் பூத்திருந்தது
குளிர்மேகம், தண்ணிலவு என
எல்லாமெனை
இன்பபுரிக்கு கொண்டு சென்றன

ஐராவதம், நந்தி, கருடன், மயிலென
கடவுளர் அவர்தம் வாகனங்களை
எனக்கென அனுப்பி
உலகைச் சுற்றிப் பார்க்கவைத்தனர்

செவிப்பறைகளில் இளையராஜா
சங்கீதமாய் இழைந்தார்
செந்தமிழ்த்தாய் தனது ஒராயிரம் கவிதைகளை
ஒரே சமயத்தில்
கற்றுத்தந்து முடித்திருந்தாள்

இத்தனை காலம் சொன்னதில்லையா?
உண்டு
இதுகாறும் நான் உணர்ந்த்தில்லையா?
உணர்ந்திருக்கின்றேன்
இன்றென்ன புதிதாய்?
ஆம்,
நான் புதியவனாக
நான் அழகனாக
நான் தகுதியுடையவனாக
நான் நானாக
இன்றுதானே உணரப்பட்டிருக்கிறேன்
ஏற்கப்பட்டிருக்கிறேன்..

அதன் ஆனந்தம்
நீங்களும் உணருகையில்
இவையெல்லாம் உங்களுக்கும் நடக்கலாம்...!

1 comment: