Saturday 22 August 2015

மனம்

நேற்று நண்பர் #ஆதவப் பிரியன் பக்கத்தில் நானும் சரவணா ஹரியும் தொடர் பின்னூட்டமிட்டதை உங்கள் பார்வைக்குத் தொகுத்துள்ளேன்

சரவணா ஹரி.
முற்றற்ற வளைதலுடன்
வழக்கொழியா விளைதலுடன்
கணுக்கணுவாய் இடர்களுடன்
விடைபகறா
வினாக்களுடன்
விதிமுடியா
தொடர்தலுடன்
முடிவற்ற
முடிவிலியாய் ....
தேடிக்களைத்தாலும்
கண்டே திளைத்தாலும்
அடுத்தென்ன என்றதனையே
அடுக்கிச் சென்றிடும் வாழ்க்கை...

Maha Suman
கிடைக்காதோ, கிடைத்தாலும் ஏற்காதோ இந்த பாழ்மனது?

சரவணா ஹரி
ஏற்றாலும் நிலைத்திடுமோ அச்சுழல் மனது,..

Maha Suman
நினைவுகளோ, நிகழ்வுகளோ நிலைக்காது, நிலைப்பது எதுவென்றும் அறியாது, அறியாமையில் உழலும் அம்மனது

சரவணா ஹரி
நிகழ்வுகளில் நினைவுகளில் நிலைப்பற்ற நிழல்மனது
அழலென
அறியாமையென உழன்றிடும்
பிறழ்மனது
இல்லையெனக் கொண்டேயதில்
இருத்திக்கிடந்திடும்
இயல்மனது....

Maha Suman
இருப்பதை இல்லையென, இல்லாததை இருப்பதனெ கொள்ளும் மனது, இறுதிவரை இயல்பற்று, இயல்பற்றதை அறியாது தெளிவற்றுத் திரியும் மந்தி மனது

சரவணா ஹரி
தெளியப் பிடிக்காத
தெரிவை மனது
அறிய முனையாத
அரிவை மனது
தாவித் திரிந்திருக்கும் கவி மனது
தாழப் பறந்திருக்கும்
பட்சி மனது
சித்தென லயித்திருக்கும் சிறுமனது
பித்தென பிதற்றிடும் பேதை மனது...

Maha Suman
விதைப்பு ஒன்றாய் இருப்பினும் முகிழ்ப்பது வேறாய் இருக்குமோ? சித்தென பித்தென வித்தைகள் காட்டிடும் விந்தை மனது

சரவணா ஹரி
விந்தை காட்டியே
வீழும் மனது
விடைகாண விளையா
விளம்பல் மனது
முகிழ்ப்பதில் மூழ்கிடும்
ஆழ் மனது
ஆடிஅலைந்திடும்
பேய் மனது
உள்ளதைப் பகரா
வேட மனது
புரிதலில் முயலாப்
பெட்டை மனது....

Maha Suman
எத்தனை மனதை கொண்டிருந்தென்ன? கிடைப்பதை விட்டு பறப்பதை நாடும், இருப்பதை இழந்து இழந்ததைத் தேடும், இறுதியில் எல்லாம் விடை பெறும் வேளையில் மனமே மாயமென்றாகிட நாணும் மந்தையில் ஒன்றாய் ஆடும் மனது

சரவணா ஹரி
இருப்பதை தொலைத்து
தொலைத்ததில் அலைந்து
அலைந்ததில் களைத்து
களைத்ததில் ஓய்ந்து
ஓய்ந்ததில்
அடங்கியே மாய்ந்திடும்

மாய மனது.,

No comments:

Post a Comment