Saturday 29 August 2015

எனது அழகான கனவு

















கச்சிதமான அக்கனவுக்குள்
ஒரு அழகான கவிதை வரையப்பட்டிருந்தது

இயற்கையின் பச்சை வர்ணங்களற்று
கருப்பு வெள்ளை சித்திரமாகத்தான் இருந்தது

நறுமணம் நிறைந்திருந்ததாகத் தோன்றினாலும்
அவை பூக்களில் பிறந்ததாகத் தோன்றவில்லை

உணர்வுகளின் இரைச்சலையும் மீறி
நிசப்த சங்கீதத்தால் இழைக்கப்பட்டிருந்தது

கனவின் செல்லுலாயிட் சித்திரங்களினூடே
உரக்கக் குரைத்துக்கொண்டிருந்த தெருநாயும்
உள்ளுக்குள் தவித்துக்கொண்டிருந்த மனநாயும்
ஒன்றெனவே தோன்றியது

எந்தவொரு வரியும் வாக்கியமும்
என்றோ படித்த
எங்கேயோ கேட்ட கவிதையாகவோ
கவிதையின் கருவாகவோ இருக்கவில்லை

ஒற்றை பக்கத்திலெப்படி
ஓராயிரம் நிகழ்வுகளை புதைத்துக் கொள்ளமுடியுமென
கேள்வியெழும்போது
உனதொற்றைப் பார்வை
மனிதனின் அத்தனை உணர்வுகளையும்
பதுக்கிக்கொன்டிருந்தது
ஒப்பிட ஏதுவாயிருந்தது

அக்கனவின் சாராம்சமோ, விவரிப்போ
உங்களுக்கு அவசியப்படாது
ஏனெனில்
எனக்கு அழகாகத் தோன்றுவது
உங்களுக்கும் அப்படி இருக்கவேண்டுமென
அவசியமில்லையே..!

No comments:

Post a Comment