Thursday 20 August 2015

போர்க்களம்


சரித்திரத்தில் பொறிக்கப்படவேண்டிய
சாதனை வெற்றியின் முடிவில்

பிளந்து கிடந்த கோட்டை வாயில்களும்
சிதைந்து சிதிலமடைந்திருந்த
சுற்றுப்புறச் சுவர்களும்
உருண்டு கிடந்த தலைகளும்
உயிரற்று கிடந்த உடல்களும்
பெருகி ஓடிய இரத்த ஓடையும்
வரவழைத்திருந்தன
வல்லூறுகள் ஆயிரத்தை

ஒரு வெற்றிக்குள்
பல்லாயிர தோல்விகள் புதைந்திருக்க
ஒரு வீழ்ச்சியில்
எண்ணற்ற வாழ்வு பொலிவிழந்திருக்க
ஒரு மரணத்தில்
பல உயிர்களுக்கு உணவு கிடைத்திருக்க

நீரும்
நிலமும்
காற்றும்
வானும்
நெருப்பும்
தமக்கு ஏதும் ஆகாததைப் போல்
பட்ட கறையை துடைத்துவிட்டு
சுழன்றோடத் தொடங்கின

நான் மட்டும்
என்னை வெல்லும் முயற்சியில்
பெற்ற வலிகளை
நாக்கொண்டு சுவைத்து
நரக வேதனையை சொல்லமாட்டாமல்
மண்ணை குழித்து
என்னை புதைக்க
ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்

சுற்றிக்கொண்டிருந்தன
ஆயத்த நிலையில் பல நூறு
வல்லூறுகள்...!

No comments:

Post a Comment