Saturday 22 August 2015

மயிற்பீலி வருடல்

வெறுப்பு திராவகச் சொட்டுகள்
விரல் நுனி வழியே வடியத் தொடங்கி
எழுத்தாணியின் முனையில் தொக்கி நின்றன

பனையோலைச் சுவடியில்
பதியப்பட்ட எழுத்துக்களில் சிலச் சொட்டுக்கள் சிந்த
துளையான எழுத்துக்கள்
துவாரங்கள் வழியாக சிரிக்க முயன்றன

அமைதி ஆச்சரியம் ஆனந்தமென
உணர்வுகளில் இழைந்த அவ்வெழுத்துக்கள்
உறுதியிழந்த நிலையில்
ஒவ்வொன்றாய் சிதறத் தொடங்கின

வசந்த காலத் தென்றலும்
அடுக்குமல்லியின் வாசமும்
தென்மேற்கு மழையின் சாரலுமாக
சுகமாயிருந்த வார்த்தைகளின் மூலங்கள்
திசைக்கொன்றாகி
துயரக் காற்றில் கலந்தன

அடுத்த மழைகாலத்திற்கு முன்பாக
அவ்வெழுத்துக்கள் வரக்கூடுமென
தனக்குள் சொல்லிக்கொண்ட விரல்கள்
அதற்குமுன்பாக
திராவகம் தின்ற தன்னை
தற்காத்துக்கொள்ள

ரணமானவை வடுக்களாக மாறா வண்ணம்
மயிற்பீலி வருடலால் மருந்திட்டு
காத்திருக்கத் தொடங்கின

No comments:

Post a Comment