Thursday 27 August 2015

வார்த்தையம்புகள்















உணர்வேறிய வார்த்தைகளின்
உற்சவ நாளது

ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியவைகளில்
ஒன்றுகூட தனதிருப்பிடம் மாறாமல்
தனித்தன்மையுடன்
இயல்புத்தன்மை கெடாமல்
கோர்வை கலையாமல் இருந்தன

முழுமையும் தெளிவும் பொருந்திய அவை
நாக்கு நாணேற்றப்பட்டு
சென்றடையும் இடங்களை
அம்புகளாய் தாக்குமென்பதில் ஐயமிருக்கவில்லை

சுக்ரீவனை திருப்தி செய்ய
ஏழு மராமரங்களை ஒருசேரத் துளைத்த
இராமனம்பு போன்று
எத்தனை தடையுத்தரவு வரினும்
அவற்றையுந் துளைத்து
அகமகிழ தயாராயிருந்தன அவ்வார்த்தைகள்

தண்மையும் திண்மையும் பெற்றிருந்ததால்
எய்பவனின் எண்ணங்களை
எளிதில் கொண்டு செல்ல
ஏதுவாகதும் இருந்தன

வீழ்த்த முனைந்து
விழிதிறந்த வார்த்தைகளினெதிரில்
அன்பெனும் அருங்கேடயமிருக்கக்கண்டு
ஒவ்வொன்றும் தொண்டைக்குழியில் தங்கி
அகத்தில் கரையத் தொடங்கின

பிரிதொரு நாளிலவை
வெளிவர நேருமானால்
முந்தைய வீரியம் இராதெனத் தெரிந்தே
புதிய சில வார்த்தைகளை தேடியெடுத்து
பக்குவப்ப(ட)டுத்தத் தொடங்கினேன்..!

No comments:

Post a Comment