Thursday 30 July 2015

தேநீர்


வாரத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால் மதிய அசைவ உணவை ஒரு பிடி பிடித்தபின் தனக்கு பிடித்தமான தனது படுக்கையில் கையில் கவியரசு கண்ணதாசனின் சேரமான் காதலியோடு விழுந்தான். நான்கு பக்கம் கூட படித்திருக்க மாட்டான். அப்படியே புத்தகத்தை தன்மேல் கவிழ்த்தபடி ஆழ்ந்து உறங்கிவிட்டான்.

சட்டென்று கண் விழித்து பார்த்தபோது மாலை 5.14 ஆகி இருந்தது. தேநீர் குடிக்கவேண்டும் போல இருந்தது. தனது மனைவியை “லக்ஷ்மி” என சப்தமிட்டு அழைக்க அவள் ஹாலில் இருந்துகொண்டே “என்ன அருண்” என குரல் கொடுத்தாள்.

“டீ வேணுமே” என பதிலுக்கு குரல் கொடுத்த அருணிடம் லக்ஷ்மி ஹாலில் இருந்தபடியே, “நீங்களே போடுங்களேன்” என பதிலிருத்தாள்
படுக்கையில் பதில் பேசாமல் சிறிது கோபத்துடன் உருண்டவன் வாரத்தில் ஒரு நாள்தான் வீட்டில் இருக்கேன், அன்னைக்குக் கூட தனக்கு தேவையானதை செய்து தர மாட்டாளோ, அம்மாவாக இருந்தால் நான் கேட்பதற்கு முன்னரே டீ வருமே என தனக்குத்தானே சலித்துக்கொண்டான்.
மேலும் ஒரு 15 நிமிடங்கள் கழிந்த பின்னர் தனக்கு வேறு வாய்ப்பில்லையென உணர்ந்து எழுந்து சமையலறை சென்று பாலை பாக்கெட்டிலிருந்து பாத்திரத்திலாக்கி கொதிக்கவைத்து டீத்தூள் இட்டு மீண்டும் கொதிக்கவைத்து வடிகட்டி இரு கோப்பைகளில் எடுத்தவாறு ஹாலுக்குச் சென்றான்.
ஒரு கோப்பையை லக்ஷ்மியிடம் கொடுக்க, புன்முறுவலோடு வாங்கிக் கொண்ட லக்ஷ்மி உதட்டில் வைத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சிய உடனே கோப்பையை டீப்பாயில் வைத்து விட்டு அருணை கைபிடித்து அருகிழுத்து கன்னத்தில் ஒரு முத்தமீந்து, “என் அன்புக் கணவனின் சுவைமிகு தேநீருக்காக. லவ் யூ டா” எனச் சிரித்தாள்.

அத்தனை அலுப்பும் சலிப்பும் அந்த ஒரு முத்தத்தில் காணாமல்போக முகமெல்லாம் மலர்ச்சியுற்ற அருணுக்கு என்றாவது தனது மனைவியின் அன்றாட அலுப்புத் தீர ஒரு முத்தம் அவள் செயலை பாராட்டி தான் தந்திருக்கின்றேனா என நினைத்தபோது சங்கடமே அவனுள் மேலோங்கியிருந்தது.

No comments:

Post a Comment