Monday 27 July 2015

மாமனிதர் மறைந்துவிட்டார்

தற்புகழ்ச்சி கொள்ளாத
தன்பெருமை பேசாத
தன்னை முன்னிலை படுத்தாத
தன் செயல்களாலும்
தூய எண்ணங்களாலும்
போற்றப் படும் நிலைக்கு உயர்ந்த மாமனிதர்
தொலை நோக்குப் பார்வையை
இளையோர் எண்ணங்களில் விதைத்து
நம்பிக்கை கரங்களை வலுப்பெறச் செய்து
எதிர்காலம் நமதென்று
புகழ்பரணி பாடச் சொன்னவர்
கண்ணடைத்து உறங்குகையில்
காண்பதுவே கனவென இருந்தோரை
கண்மூட அனுமதியா உணர்வுகளே கனவென்று
புது வடிவம் தந்தவர்
வானேறி புக்க
திறனுண்டு உனக்கென்று
தோள்தட்டிச் சொல்லி
நிகழ்த்தியும் காட்டியவர்
சோறுண்ணும்போது மரிக்கவில்லை
சுகித்திருக்கும் போது மரிக்கவில்லை
உறக்கத்தின் மடியில் இறக்கவில்லை
உடல் நோயால் வாடிக் கிடந்து இறக்கவில்லை
தனக்கு மிகவும் பிடித்த செயலான
இளைய தலைமுறையுடன் அளவளாவும் போது
தன்னுயிர் இழத்தல் எத்தனை புண்ணியம்
வாழ்ந்தால் இவரைப் போல் வாழணும்
இறந்தாலும் இவரைப் போல இறக்கணும்
வாழ்க எம்மினத் தலைமகனே
எம்மில் என்றும் தரமான எண்ணங்களால் வாழ்பவனே.....!

No comments:

Post a Comment