Wednesday 5 February 2014

களவு போன காந்தம்



எனக்கவளை பிடிக்கும்,
சிரிக்கும் பூமழை சித்திரம்,
அருவியாய் மொழி பேசும்
ஆனந்த பொன்சாரல்,
கனவுகளை ஆட்சி செய்யும்
உற்சாக தேவதை.

என்னையும் அவளுக்கு பிடிக்கும்,
என்னுள்ளே காந்தம் இருப்பதாய்
எப்போதும் உரைப்பாள்.

சுட்டும்விழியும்,
கொட்டும் மொழியும்,
எட்டும் நடையும்,
என்னில் நிறைந்ததாயவள்
எண்ணுவாள்.

அலுவலகம் சென்றவளை
காணும்வரை அப்படித்தான்.

சுற்றிய பட்டாம்பூச்சியைச்
சுற்றி பல வண்டுகள்.
சிதறிய சிரிப்பொலியை
அள்ளிக்கொள்ள ஆயிரம் விரல்கள்.

ஒவ்வொரு காட்சியும்
உள்ளத்தீயை
ஊதி ஊதி பரத்தின.

அவ்விடம் விட்டகன்றவெனக்கு
அகத்தில் அமைதி போனது,
பொறாமைத்தீ பிடித்த எனக்கு
அறியவில்லை,
எனது காந்தம்
களவாடப்பட்டதை.

நேர்சிந்தை தொலைந்து
நிம்மதி யிழந்த மனதில்
அன்பெனும் காந்தம்
குடியிருப்பதில்லை.

மீட்டெடுக்க வழியின்றி
மௌனத்திரையிட்டு நான்..!

1 comment: