Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

Monday, 21 September 2015

மாமனிதர் அப்துல் கலாம் ஐயாவிற்கு அஞ்சலி


அழுத விழிகளினி ஆற்றல் கொள்ளட்டும்
சுடர்விடும் நம்பிக்கை வான் தாரகையாகட்டும்
இதயச் சுவற்றில் புதுச் சூளுறை எழுதட்டும்
இந்திய தேசம் பெரும் வல்லரசாகட்டும்

கனவு மெய்ப்படும் நம் காலம் வாய்க்கிறது
வானின் கோளெங்கும் பாரத மென்கிறது
ஏழ்மைச் சிறைகள் சிதறி துகளாய் உதிர்கிறது
எளிமை கொண்ட வுயிர் எம்முடன் வாழ்கிறது

இளையச் சமுதாயம் உமது ஒளியேந்தி
தரணியெங்கும் மிளிர்கிறது
உலகப் பெருமகனார் கண்ட கனவுகளாய்
மலரும் பூக்களிங்கே நிஜங் கொண்டே எழுகிறது

நீங்கா துயில் கொள்ளுமுன்
நினைவுப் பதியங்கள்
மனிதமனைத்திலும் உயிர்க்கிறது

Friday, 4 September 2015

சுபா- தனி ஒருவன்



சுபா- தனி ஒருவன்

சுரேஷ் பாலா எனும் இந்த இரண்டு நண்பர்களின் கதைகள் மீது எனக்கு சிறுவயது முதலே அலாதி ப்ரியம். சுவையான கதையோட்டம், சிறப்பான மொழி நடை, எளிமையான விவரிப்பு, தேவையான விறுவிறுப்பு, தெளிவான கதாபாத்திரங்களென இவர்களின் கதைகள் படிக்கப் படிக்க மிகுந்த ஆர்வத்தை கொடுக்கக்கூடியவனவாக இருந்தன.

இவர்களது கதைகளில் துப்பறியும் நரேன், வைஜயந்தி மற்றும் செல்வா எனும் கதாபாத்திரங்கள் நினைவை விட்டு நீங்காதவை. இவர்களது சூப்பர் நாவல் என்னும் மாதாந்திர கதைகளை தாங்கும் புத்தகத்தில்தான் கே.வி.ஆனந்த் என்னும் இளைஞர் அட்டைப்பட புகைப்படக் கலைஞராக அறிமுகமானார்.

பின்னர் கே.வி.ஆனந்த் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளராக ஏற்கப்பட்டு அதன் பின்னர் படங்கள் இயக்கத் தொடங்கியபோது அவர் சுபாவின் கதைகளையே தேர்ந்தெடுத்தார். கனாக் கண்டேன், அயன், மாற்றான், கோ என இவர்களது கதையாக்கங்களில் வெற்றி பெற்ற படங்களில் திரைக்கதையமைப்பும் திருப்பங்களும் மிகுந்த ஆர்வத்தை கொடுப்பனவாக இருந்தன.

கோ படத்தில் வில்லனாக வரும் முதலமைச்சர் கதாபாத்திர இளைஞர் இறுதியில் இறக்க நேரிடும்போதும் அவனை நல்லவனாக சித்தரித்து சமூகத்திற்கு இளைஞர்களுடைய எழுச்சி வேண்டுமென காட்டியது திரைப்படம் பார்த்த என்னை அளப்பரிய மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.

நேற்று பார்த்த தனி ஒருவன் திரைப்படத்திலும் கதை, திரைக்கதை வசனத்தில் இவர்களது பங்கு இருந்தது. திரைக்கதையில் அது தெள்ளெனத் தெரிந்தது. ஜெயம் ரவியின் உடலில் சுவடறிவான் பொருத்தப்படுவதும், அதைக் கொண்டு கதாநாயகனின் ஒவ்வொரு அடியையும் வில்லன் கண்காணிப்பதும் இறுதியில் வில்லனை எல்லா வகைகளிலும் செயலிழக்க வைத்து செக் அண்ட் மேட் என்னும் நிலையில் கதாநாயகன் இருத்துவதும் என படம் பிரமிப்பூட்டும் வேகத்தில் சென்றது என்னை மிகுந்த மகிழ்ச்சியிலாக்கியது.

தனி ஒருவன் திரைப்படத்தை பொறுத்தவரை இயக்குனர் மோகன் ராஜா தன்னை ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என நிரூபித்திருக்கிறார். படத்தில் எந்த தேவையற்ற காதலோ, காமெடியோ இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை நம்மை நாற்காலியின் நுனியில் இருத்தி வைத்திருக்கிறார்,

இவ்வளவு சொன்ன நான் எனக்கு படத்தில் மிகவும் பிடித்த காட்சியை சொல்லாமல் விடமுடியாது.

கதாநாயகன் வெறுப்பின் உச்சத்தில் துடித்தவாறு தனது உயிரை கொடுத்தாவது வில்லனை பிடிப்பேனெனச் சொல்லும்போது கதாநாயகி சொல்லும் வசனத்தில் எவ்வளவு அர்த்தம் பொதிந்திருக்கின்றது. எழுச்சி ஆழப் பதிந்திருக்கிறது என்பதௌ நீங்களே பாருங்கள் தோழமைகளே! பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள். நன்றி

எழுத்தாளர்கள் சுபா குறித்த விக்கிப்பீடியா லிங்க்

Tuesday, 16 December 2014

அந்தரத்தில்


















எங்கிருந்து வந்ததென்று அறியாத ஒளிச்சிதறல்களில்
எனை இணைத்துக்கொள்ளும் ஆவலுடன்
ஒற்றைப் பிழம்பை இறுகப் பற்றி
எனதிறக்கைகளையும் விரித்துக்கொண்டேன்

மனோவேகத்தையும் மிஞ்சியதொரு வேகத்தில்
பூலோகத்தை கடந்து
விண்ணிற்குள் புகுந்து
வேற்றுக் கிரகங்களில் சஞ்சாரம் செய்யத் தொடங்கியது

அண்டத்தின் விளிம்பையடைந்த நிலையில்
சிற்றொளியாயிருந்த அப்பிழம்பு
அதனையொத்த ஒளிக்கற்றைகளுடனிணைந்து
பேரொளியாகப் பிரகாசிக்கத் தொடங்கியது

அண்டத்தைக் கடக்க
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நானங்கே

அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தேன்.!

Wednesday, 22 October 2014

EDGE OF TOMORROW



நேற்று THE EDGE OF TOMORROW என்ற ஒரு ஆங்கில சினிமா பார்த்தேன் டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்த படம். 2010ல் வெளிவந்த INCEPTION என்னும் லியனார்டோ டி காப்ரியோ கதாநாயகனாக நடித்த நோலான் இயக்கிய சினிமாவைப்போல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது இந்த படமும்.
ஹொரொஷொ சகுரஷகா என்னும் ஜப்பானிய எழுத்தாளரின் ALL YOU NEED IS KILL என்னும் கதையை மூலமாகக் கொண்ட THE EDGE OF TOMORROW நேற்று தோழி NIRAI MATHI யின் பதிவொன்றில் நான் இட்ட பின்னூட்டத்தைக் குறித்து மீண்டும் சிந்திக்க வைத்தது.
இந்த பிரபஞ்சத்தில் அறியப்படாதவை 95%ம் அறிந்தவை எஞ்சிய 5%வும் மட்டுமே என்று விஞ்ஞானிகள் கூறியதாகப் படித்திருக்கின்றேன்
அவ்வாறு இருக்கும்போது இங்கு நமக்குள் வரும் கற்பனைகள் எதுவுமே நிகழக் கூடிய வாய்ப்பில்லை என்று கூற முடியாது. அதீத கற்பனை என்று எதுவுமே இல்லை. ராமாயண, மகாபாரதங்களும் நடந்திருக்கலாம், கனவுகளைத் திருடுவதும், காலங்களை மாற்றி அமைப்பதும் நடக்கலாம், அல்லது நடந்திருக்கலாம்.
இந்த வாழ்வின் அர்த்தம் புரியாமல் ஒவ்வொருவரும் அதற்கான விடையைத் தேடியே இங்கு பயணிக்கிறோம். நமக்கான சந்ததியை நாம் இங்கு படைப்பதுவும் அந்த கேள்விக்கான விடையைத் தேடுவதற்காகக் கூட இருக்கலாம்.என்றேனும் விடை கிடைக்கலாம். கிடைக்காமலே போகலாம். தேடல் மட்டும் நிற்கப் போவதில்லை.
சரி நான் பார்த்த THE EDGE OF TOMORROW வைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஒரு படத்தில் வடிவேலுவிடம் ஒரு நடிகர் சொல்வார், நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோமா? என்று. THE EDGE OF TOMORROW பார்த்ததும் அந்த டையலாக்தான் நினைவுக்கு வந்தது.

Wednesday, 5 February 2014

காகிதப்படகு

அது ஒரு இரண்டு நாள் பயிற்சியரங்கம். நானும் எனது சக நண்பர்களும் பங்கேற்றிருந்தோம். பயிற்சியாளர் முதல் நாள் பயிற்சிகள் கற்றுத் தந்துவிட்டு அடுத்த நாள் ஒரு போட்டி வைத்தார்.
எங்களை நான்கு குழுவாக பிரித்திருந்தார். ஒவ்வொரு குழுவிற்கும் A4 சைஸ் காகிதம் கொடுத்து அதை வைத்து ஒவ்வொரு குழுவும் எத்தனை காகித கப்பல் செய்கிறதென பார்க்கிறேனென்றார்.
நான் ஒரு குழுவின் தலைவனாக இருந்தேன். என்னிடமிருந்த மற்ற 4 பேர்களில் ஒருவரிடம் நான் காகிதத்தை கொடுத்து 4ஆக வெட்ட சொன்னேன். இரண்டாமவரிடம் அந்த வெட்டி வந்த காகிதத்தின் விளிம்புகளை ஒழுங்கு படுத்த சொன்னேன். மூன்றாவது நபரிடம், காகித கப்பலை செய்ய சொன்னேன். நான்காவது நபரிடம் எடுத்து அடுக்கி வைக்க சொன்னேன். நான் ஒருவரிடமிருந்து அடுத்த நபருக்கு காகிதத்தை மாற்றி கொடுத்தேன்.
இறுதியில் 5 நிமிட சோதனை நேரத்திற்கு பிறகு, எல்லோரையும் நிறுத்த சொல்லிவிட்டு ஒவ்வொரு குழுவாக வந்து பயிற்சியாளர் சோதனை செய்ததில், இரண்டாவது குழு 15 காகிதப்படகுகளும் நாங்கள் 13 காகிதப்படகுகளும், மற்ற அணியினர் முறையே 10, 9 என செய்திருந்தனர்.
பயிற்சியாளர் முதல் இட்த்தை பிடித்த குழுவின் காகித கப்பலில் நிறைய விளிம்புகள் நன்றாக இல்லையென கூறி, எங்கள் குழுவை முதல் என்று அறிவித்தார்.
பின்னர் என்னை பார்த்து, நீங்கள் எவ்வாறு வெற்றியடைந்தீர்கள்? உங்கள் பங்கு என்ன என வினவினார்.
நான் சொன்னேன், “எனது பங்கு இதில் ஒன்றுமில்லை. நான் வெறும் சேவகப்பணிதான் செய்தேன். காகித்த்தை எடுத்து ஒரு மேசையிலிருந்து இனியொரு மேசைக்கு கொடுக்கும் சாதாரண பணியைத்தான் செய்தேன்” மேலும் சொன்னேன், “எனது தோழர்கள்தான் மிக சிறப்பாக செயல்பட்டு வேகமாகவும், அழகாகவும் காகித கப்பல்களை செய்தனர்”
பயிற்சியாளர் சொன்னார், “இதுதான் சிறந்த தலைமை பண்பு. தலைவர் எனப்படுபவர், சேவகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்”

Monday, 27 January 2014

ஆபித் சுர்தி

ஒரு சிறு பொறி இவ்வுலகையே மாற்றவல்லது என்பதற்கு இவ்வுண்மை கதை நல்ல உதாரணம்

ஆபித் சுர்தி, ஒரு வித்தியாசமான மனிதர். 1935, மே 5 ஆம் நாள் பிறந்த குஜராத்தியான இவர், ஒரு சிறந்த எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட், ஓவியர். இவர் 1993ல் எழுதிய ஒரு புத்தகத்திற்காக தேசிய விருது வழங்கப் பட்டது.
எனினும் உலக அளவில் இவர் புகழப்பட காரணம், இவரது ஒரு சிறு முயற்சிதான். அதற்குக் காரணமாய் அமைந்தது அப்போது ஐ நாவின் தலைவராக இருந்த புட்ரொஸ் புட்ரோஸ் காலியின் கருத்தை இவர் படிக்க நேர்ந்ததுதான். 2025ல் உலகில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் அதீத தண்ணீர் தட்டுப்பாடு காணப்படுமென சொல்லி இருந்தார். ஆபித் சுர்திக்கு தனது பால்ய நினைவுகளும், தண்ணீருக்கு அப்போது அவர்கள் பட்ட பாடும் நினைவில் வந்து முட்டின.
அதே சமயம் ஒரு நண்பர் வீட்டில், அவர் குளியலறையில் ஒழுகும் குழாயைக் கண்டு, அதை சரி செய்யக்கூடாதாவென கேட்ட போது, நண்பரின் பதில் ஆபித் சுர்தியை சிந்திக்க வைத்தது.
நண்பர் சொன்னார், “ஒரு குழாய் சரிசெய்யும் ஆளை கொண்டு இந்த சாதாரண ஒழுகலை சரி செய்ய இயலாது, அது விலை மிகுந்த செயலாகும், மேலும் இந்த செயலுக்காக குழாய் சரி செய்யும் ஆள் வரமாட்டான்” என்று.
ஒரு வி நாடிக்கு ஒரு சொட்டாக வடியும் நீரால் நாம் ஒரு மாதத்தில் 1000 லிட்டர் நீரை இழக்கிறோமென எங்கோ படித்தது அவர் மனதில் நிழலாடியது.
அவர் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு குழாய் சரி செய்யும் ஆளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ஞாயிறுகளிலும் ஒவ்வொரு அடுக்குமாடியாக சென்று, ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி, குழாய் ஏதும் ஒழுகுகிறதா? ரப்பர் இணைதடுப்பான் (ரப்பர் ஒ ரிங்க்) ஏதும் மாற்ற வேண்டியுள்ளதாவென சோதித்து சரி செய்து கொடுக்க எண்ணினார். பணம் தேவை பட்டது.
நல்லெண்ணம் இருந்தால் எல்லாம் கூடிவருமென சொல்வதற்கு ஏற்ப, அந்த சமயத்தில் ஹிந்தி எழுத்துக்கு அவருக்கு எதிர்பாராதவிதமாக 1 லட்சம் ரூபாய் பரிசு பணம் வழங்கப்பட்டது.
உடனே செயல்பட்டார். ஒரு குழாய் சரி செய்யும் ஆளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு குடியிருப்பை அணுகி குழாய்களை சரி செய்து கொடுக்கத் தொடங்கினார். ஆம், இலவசமாகத்தான்.
அவரது ஒரு மனித அமைப்பிற்கு Drop Dead என பெயரிட்டு Save every drop or Drop Dead என வாசகத்தை தனது அமைப்பிற்குப் பொருத்தினார்.
முதல் வருட முடிவில் அவர் 1533 இல்லங்களில் கதவுகளை (மனக்கதவுகளையும்தான்) தட்டியிருந்தார். 400 குழாய்களுக்கும் மேல் சரி செய்திருந்தார்.
சிறிது சிறிதாக செய்தித்தாள்களிலும், மீடியாவிலும் அவர் புகழ் பரவத் தொடங்கியது. 2010ல் CNN IBN BJ வின் Be the change (மாற்றமாயிரு) எனும் விருது வழங்கப்பட்டது. அதே வருடம் பெர்லினிலிருந்து வந்த ஒரு தொலைகாட்சி குழு அவரை காலை முதல் மாலை வரை ஒரு ஞாயிறில் தொடர்ந்து ஒளிபரப்பியது.
2013ல் அவர் வசித்த பகுதியில் 40 வருடங்களில் மிகுந்த தண்ணீர் தட்டுப்பாடு வருமென அறிவிக்கப்பட்டு, அந்த மா நில அமைச்சர்கள் ஒன்று கூடி, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முனைந்து கொண்டிருந்தபோது, இந்த சாதாரண மனிதர், தனது சுய நலமற்ற தொண்டால், சிறு முயற்சியால் எவ்வளவு தண்ணீரை சேமித்திருப்பார் என சொல்லவேண்டுமா?
வாழ்க ஆபித் சுர்தி, அவரைப்போல் நாமும் ஏதேனும் செய்து ஒரு சமுதாய மாற்றத்தை கொண்டுவர முயல்வோமா

Monday, 20 January 2014

அறிவுச் சுடர்














அறிவாளிகளின் கூட்டத்தில் நானொருவன்
அரற்றிக் கொண்டிருந்தேன்
அவர்களின் அமைதிசுவாசம் எனக்கு
அலுப்பாயிருந்தது.
என் குரல் மட்டும் தனித்துக் கேட்க
எனக்கு வெறுப்பாயுமிருந்தது.
இடை நிறுத்தி
மௌனமூச்சை சுவாசிக்க முயன்றேன்.
விழிகளில் ஈரம்
வடியத் தொடங்கியது.
அதுவரை மங்கலாயிருந்த பார்வை
விழிநீர்த்திரை மறைப்பில்
வெளிச்ச பூமியை
வெளிக்கொணர்ந்தது.
அமைதியின் வடிவத்தில்
அறிவுச் சுடரை

காணத் தொடங்கியிருந்தேன்.