Thursday, 30 July 2015

தேநீர்


வாரத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால் மதிய அசைவ உணவை ஒரு பிடி பிடித்தபின் தனக்கு பிடித்தமான தனது படுக்கையில் கையில் கவியரசு கண்ணதாசனின் சேரமான் காதலியோடு விழுந்தான். நான்கு பக்கம் கூட படித்திருக்க மாட்டான். அப்படியே புத்தகத்தை தன்மேல் கவிழ்த்தபடி ஆழ்ந்து உறங்கிவிட்டான்.

சட்டென்று கண் விழித்து பார்த்தபோது மாலை 5.14 ஆகி இருந்தது. தேநீர் குடிக்கவேண்டும் போல இருந்தது. தனது மனைவியை “லக்ஷ்மி” என சப்தமிட்டு அழைக்க அவள் ஹாலில் இருந்துகொண்டே “என்ன அருண்” என குரல் கொடுத்தாள்.

“டீ வேணுமே” என பதிலுக்கு குரல் கொடுத்த அருணிடம் லக்ஷ்மி ஹாலில் இருந்தபடியே, “நீங்களே போடுங்களேன்” என பதிலிருத்தாள்
படுக்கையில் பதில் பேசாமல் சிறிது கோபத்துடன் உருண்டவன் வாரத்தில் ஒரு நாள்தான் வீட்டில் இருக்கேன், அன்னைக்குக் கூட தனக்கு தேவையானதை செய்து தர மாட்டாளோ, அம்மாவாக இருந்தால் நான் கேட்பதற்கு முன்னரே டீ வருமே என தனக்குத்தானே சலித்துக்கொண்டான்.
மேலும் ஒரு 15 நிமிடங்கள் கழிந்த பின்னர் தனக்கு வேறு வாய்ப்பில்லையென உணர்ந்து எழுந்து சமையலறை சென்று பாலை பாக்கெட்டிலிருந்து பாத்திரத்திலாக்கி கொதிக்கவைத்து டீத்தூள் இட்டு மீண்டும் கொதிக்கவைத்து வடிகட்டி இரு கோப்பைகளில் எடுத்தவாறு ஹாலுக்குச் சென்றான்.
ஒரு கோப்பையை லக்ஷ்மியிடம் கொடுக்க, புன்முறுவலோடு வாங்கிக் கொண்ட லக்ஷ்மி உதட்டில் வைத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சிய உடனே கோப்பையை டீப்பாயில் வைத்து விட்டு அருணை கைபிடித்து அருகிழுத்து கன்னத்தில் ஒரு முத்தமீந்து, “என் அன்புக் கணவனின் சுவைமிகு தேநீருக்காக. லவ் யூ டா” எனச் சிரித்தாள்.

அத்தனை அலுப்பும் சலிப்பும் அந்த ஒரு முத்தத்தில் காணாமல்போக முகமெல்லாம் மலர்ச்சியுற்ற அருணுக்கு என்றாவது தனது மனைவியின் அன்றாட அலுப்புத் தீர ஒரு முத்தம் அவள் செயலை பாராட்டி தான் தந்திருக்கின்றேனா என நினைத்தபோது சங்கடமே அவனுள் மேலோங்கியிருந்தது.

Wednesday, 29 July 2015

எங்கே எனது கவிதை


























முடிந்து போன கனாவொன்றின்
மலர்கள் பூத்த நந்தவனத்தின் மணம்
இன்று காலை பரபரப்பினிடை
மிச்சமிருந்தது

வாகனத்தின் முன்பாக
அசைந்து சென்ற காளையின் கொம்பில்
நேற்றிரவின் பனித்துளியொன்று
படிந்திருந்தது

தெருவிளக்கின் அடியில் நின்ற
தெரு நாயின் பற்களுக்குள்
பழச்சுவை கனிந்து
கலந்திருந்தது

விரலிடுக்கில் கனன்ற கங்கிலிருந்து
உதிர்ந்த சாம்பலினுள்
அந்நேரம் அணையத் தொடங்கிய நெருப்பு
மினுக்கியிருந்தது

உனது நினைவுகளில் மட்டுமே
உருவான எழுத்துக்கோர்வை மட்டுமேன்
இப்போது எனைவிட்டு
நீங்கியிருந்தது?

Monday, 27 July 2015

மாமனிதர் மறைந்துவிட்டார்

தற்புகழ்ச்சி கொள்ளாத
தன்பெருமை பேசாத
தன்னை முன்னிலை படுத்தாத
தன் செயல்களாலும்
தூய எண்ணங்களாலும்
போற்றப் படும் நிலைக்கு உயர்ந்த மாமனிதர்
தொலை நோக்குப் பார்வையை
இளையோர் எண்ணங்களில் விதைத்து
நம்பிக்கை கரங்களை வலுப்பெறச் செய்து
எதிர்காலம் நமதென்று
புகழ்பரணி பாடச் சொன்னவர்
கண்ணடைத்து உறங்குகையில்
காண்பதுவே கனவென இருந்தோரை
கண்மூட அனுமதியா உணர்வுகளே கனவென்று
புது வடிவம் தந்தவர்
வானேறி புக்க
திறனுண்டு உனக்கென்று
தோள்தட்டிச் சொல்லி
நிகழ்த்தியும் காட்டியவர்
சோறுண்ணும்போது மரிக்கவில்லை
சுகித்திருக்கும் போது மரிக்கவில்லை
உறக்கத்தின் மடியில் இறக்கவில்லை
உடல் நோயால் வாடிக் கிடந்து இறக்கவில்லை
தனக்கு மிகவும் பிடித்த செயலான
இளைய தலைமுறையுடன் அளவளாவும் போது
தன்னுயிர் இழத்தல் எத்தனை புண்ணியம்
வாழ்ந்தால் இவரைப் போல் வாழணும்
இறந்தாலும் இவரைப் போல இறக்கணும்
வாழ்க எம்மினத் தலைமகனே
எம்மில் என்றும் தரமான எண்ணங்களால் வாழ்பவனே.....!

எது வாழ்க்கை



















உருகிய அந்தகார இருட்டின்
ஓரொரு துளியும்
வழிந்தச் சுவட்டில்
வலம் வரவா எந்தன் சிறகிழந்த கனவுகள்

துளையிட்ட பாறையில்
வெடிவைத்த பின்னர்
தகர்ந்தெழும் துகள்களினாலான
பூத்தூவலா எந்தன் வானம்

ஆதி யிரைச்சலும்
அண்டம் புரண்ட
பேரோசையின் கூச்சலும்
ஒன்றிணைந்து இசைத்ததா எந்தன் கானம்

அனலும் மணலும்
அருகிப் பெருகி
உருகி ஒன்றென உதிர்ந்த
உப்புக் கரைசலின்
சுவையூட்டலா எந்தன் சோமபானம்

தொட்டுத் தொடர்தலும் முடிவாகி
விட்டுக் கொடுத்தலே விடையாகி
எனை விட்டுக் கொடுத்தபின்
நீயுமெனை விட்டுக் கொடுத்ததனால்

விடையற்ற நாட்களும்
வினாவற்ற நிகழ்வுகளும்
ஒரு சேர
பரிதவிப்புடன் வரையப்பட்ட
படபடத்த பக்கங்களின் திருப்புதலா
என் வாழ்க்கை…..

Thursday, 25 June 2015

பாலைவன மணற்துகள்
















பரந்து கிடந்த பாலைவனப் பரப்பில்
சுடுமணற்துகளை ஒவ்வொன்றாயெடுத்து
பத்திரப் படுத்திக்கொண்டிருந்தேன்

பொறுமையிழந்து இருகைகொண்டு
வாரியெடுக்க முனைகையில்
விரலிடுக்குகளில் வழிந்தவையே யெந்தன் கவனமீர்க்க
எஞ்சியவை சட்டென அடித்தப் பெருங்காற்றில்
சிதறிப் போயின

ஓரிரண்டுத் துகள்கள்
விழி நுழைந்த உறுத்தலில்
துளிர்த்தத் துளிகள்
பாலையை நனைக்கக்கூடுமோவென அஞ்சினேன்

ஆங்கு அவள் தொலைவில்
நடந்து வருகையில்
கானலெனத் தோன்றி
அடுத்து வர உதவுமோவெனவும்
ஏங்கினேன்

விடையறியா கேள்விக்குள் நான் வீழ்ந்திருக்க
வினாக்களை மட்டுமே சுமந்த அவள்
வருவாளா

விடை பகர்வாளா?

சூ.சிவராமன்




கருத்தாய்வு

சூ.சிவராமன்

இனிய நண்பர் சூ.சிவராமன் எனக்கு ஒரு வருட காலமாக நட்பில் உள்ளார். மிக அற்புதமான எழுத்தாளர். உயர்ந்த சிந்தனையும் அரிய கருத்துக்களும் இனிய சொல்லாடலும் கலந்து இருக்கும் இவரது படைப்புகளில்.
பலப்பல நண்பர்களுடைய அருமையான கவிதைகளை தனது பக்கங்களில் பதிவிட்டுப் பாராட்டி மகிழ்வார்.
இவர் ஒரு சிறைந்த வாசிப்பாளர். படித்த புத்தகங்களை பற்றி அடிக்கடி முக நூலில் சொல்வார். நமக்கும் படிக்க மிகவும் ஆவலாக இருக்கும்.
இவரது எழுத்தில் சமூக அக்கறை மிக அதிகமாக்க் காணப்படும்

நினைவாயிருக்கிறாய்...

என் கண்ணீர்த் துடைத்த
முந்தாணையிலொன்று
பிடித்துணியாகி கிடக்கிறது


என்னும் கவிதையில் தன்னலமற்ற தாயன்பின் பெருமையை எத்தனை எளிதாக அதேவேளையில் உண்ர்வுகளில் ஆழப்பதியும் வண்ணம் சொல்லியிருக்கிறார்.

என்னவாக இருக்கும்...
அப்படியொன்றும்
உருகி உருகி காதலித்து விடவில்லை
பீச்சோ பார்க்கோ
காமத்தில் கட்டி உருளவுமில்லை


என்னும் இக்கவிதையை எல்லோரும் படித்துப் பாருங்கள். இவரது கேள்வி சாட்டையடிபோல் மனதை தைக்கும். என்னால் இன்றுவரை பதில் சொல்ல இயலவில்லை.

சில்லுக் கோடு விளையாடுகிறாள்
சித்ரா

சின்னச் சின்னக் கட்டங்களில்
நொண்டியடித்து தாவுகிறாள்


என்னும் கவிதையில் எவ்வளவு அழகாக எதார்த்த வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகிறார்.

உன்னதமான எழுத்தாளர். தமிழை மிகத் தூய்மையாக அழகு மிளிர எழுதுகிறார். இவரது படைப்புகள் உலகளாவி புகழ்பெறவேண்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்

தவிப்பு
























அத்தனை அலைச்சலின் முடிவில்
அன்றலர்ந்த செந்தாமரை முகத்தாளின் வாட்டம்
வாகனத்தை முடுக்கவா
சாலையோரம் நிறுத்தவாவென சிந்திக்க வைத்தது

சட்டென தேகமெங்கும் பரவிய வெப்பம்
அடுத்துள்ள மருத்துவரை
சடுதியில் அடையச் சொன்னது

அவளோ
நானடுத்து இருப்பதனால்
தான் நடுங்கப் போவதில்லையெனச் சொல்லி
வீட்டிற்கே வாகனத்தை
விரட்டுங்களென்றாள்

அந்நேரம் சொல்பேச்சுக்கேளாமையே
அவசரத் தேவையெனவுணர்ந்து
மருத்துவமனை கொண்டு நிறுத்தினேன்

அவளை விட தவிப்பது
நானென வுணர்ந்த செவிலியர்
ஆங்கோர் இருக்கையை காட்டி
அமைதியா யிருவெனச் சொல்லி அகன்றனர்

இருக்கவியலா இருக்கையில்
பொறுக்கவியலா படபடப்பில்
கையிலிருந்த நீரை
கபளீகரம் செய்திருந்தேன்

கடந்துபோன சில நிமிடத்துளிகளில்
கற்பனை சங்கை ஊதாமல்
காட்சித்திரைகளை விரிக்காமலிருக்க
ப்ரம்ம ப்ரயத்தனம் தேவைபட்டது

இடுப்பிலிட்ட ஊசியின்
வலியையும் பொருட்படுத்தாது
என் தவிப்பையுணர்ந்து வேகம் வந்தவள்
அடுத்திருந்த இருக்கையிலமர்ந்து
மென் கரம் கொண்டு என் கரம் பற்றி

எனதன்பின் கவசமிருக்க
எந்நாளும் தனக்கொன்றும் நேராதென்று
விரலசைத்து உயிர்வழி

வார்த்தைகளை உணர்த்திக் கொண்டிருந்தாள்