Thursday, 20 August 2015

போர்க்களம்


சரித்திரத்தில் பொறிக்கப்படவேண்டிய
சாதனை வெற்றியின் முடிவில்

பிளந்து கிடந்த கோட்டை வாயில்களும்
சிதைந்து சிதிலமடைந்திருந்த
சுற்றுப்புறச் சுவர்களும்
உருண்டு கிடந்த தலைகளும்
உயிரற்று கிடந்த உடல்களும்
பெருகி ஓடிய இரத்த ஓடையும்
வரவழைத்திருந்தன
வல்லூறுகள் ஆயிரத்தை

ஒரு வெற்றிக்குள்
பல்லாயிர தோல்விகள் புதைந்திருக்க
ஒரு வீழ்ச்சியில்
எண்ணற்ற வாழ்வு பொலிவிழந்திருக்க
ஒரு மரணத்தில்
பல உயிர்களுக்கு உணவு கிடைத்திருக்க

நீரும்
நிலமும்
காற்றும்
வானும்
நெருப்பும்
தமக்கு ஏதும் ஆகாததைப் போல்
பட்ட கறையை துடைத்துவிட்டு
சுழன்றோடத் தொடங்கின

நான் மட்டும்
என்னை வெல்லும் முயற்சியில்
பெற்ற வலிகளை
நாக்கொண்டு சுவைத்து
நரக வேதனையை சொல்லமாட்டாமல்
மண்ணை குழித்து
என்னை புதைக்க
ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்

சுற்றிக்கொண்டிருந்தன
ஆயத்த நிலையில் பல நூறு
வல்லூறுகள்...!

Friday, 14 August 2015

வாழிய சுதந்திரம்


சுதந்திரத் திருநாள்

பள்ளிப் பருவத்தில் அம்மாவுடன் பள்ளிக்குச் சென்று கொடியேற்றத்தில் கலந்து கொண்டு சாக்லேட் வாங்கிக்கொண்டு வந்ததில் தொடங்கிய சுதந்திர தின, குடியரசு தின நினைவுகள்,  பள்ளிப் படிப்பில் மேல்வகுப்புகளில் சுதந்திர தின அணிவகுப்பில் ஒரு வருடமும், அதற்கான கொண்டாட்ட நடனத்தில் ஒரு வருடமும் கலந்து கொண்டதில் முகிழ்க்கின்றது.

ஒவ்வொரு சுதந்திர தின, குடியரசு தின கொண்டாட்டத்தின்போதும் அப்பா என் சடடையில் குத்திவிடும் தேசியக் கொடியை எத்தனை பெருமிதம் கொண்டு பார்ப்பேன் என நினைக்கும்போது முகமெல்லாம் புன்னகை மலர்வதை மறுக்கவியலாது. அந்தக் கொடியை குத்தியவுடன் உள்ளம் உற்சாகமாகி நான் தான் கொடி காத்த குமரன் என்ற எண்ணத்துடன் என் தேசியக் கொடியை யாரேனும் தரம் தாழ்த்த நான் விடுவேனோவென துடித்த கணங்கள் எண்ணங்களில் ஊஞ்சலாடுகின்றன.

ஆயினும், சுதந்திரத்தின் பெருமையையும் அதை பெறுவதற்கு நம் முன்னோர்கள் பட்ட வேதனையையும் எனக்குக் கற்பித்தது ஒரு சினிமாதான். “கப்பலோட்டிய தமிழன்” என்னும் அந்த சினிமா நடிகர் திலகம் சிவாஜி ஐயாவால் நடிக்கப் பெற்றது. எனது குரு மாமாவின் தூண்டுதலில் ஒரு நாள் அத்திரைப்படத்தை நான் வீட்டில் கண்டேன். செக்கிழுத்த செம்மலையும், தொழு நோயால் பாதிக்கப்பட்டு விடுதலையாகி வரும் சுப்பிரமணிய சிவாவையும் பார்த்துவிட்டு எத்தனை நாட்கள் மனபாரத்துடன் அலைந்தேனென நினைவில்லை.

அன்று முதல் சுதந்திரம் பெற நம் முன்னோர்கள் பட்ட வேதனை உள்ளத்தில் நீங்காமல் நிலைகொண்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்றோருடன் கொடி காத்த குமரனும் என் நெஞ்சத்தில் உண்மையான தலைவர்களாக இன்றும் நிலைத்திருக்கின்றனர்.

மாமாவின் தூண்டுதலில் நான் சிறு வயதில் படித்த சத்திய சோதனை புத்தகம் (முழுமையாக படித்ததாக நினைவில்லை) ஏற்படுத்திய பாதிப்பும் இன்றும் இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன்பு “சிறைச்சாலை” (காலாபாணி) திரைப்படம் கண்டபோது கடைசி காட்சியாக மகாகவியின் 

“தண்ணீர் விட்டா வளர்த்தோம்- இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்”

என்ற வரிகளை படிக்கும்போது நிற்க மாட்டாமல் கண்ணீர் ஒழுகியதை அம்மா அப்பா பார்த்துவிட்டு என் கையை அழுத்திப் பிடித்தது இன்னும் என்னால் உணரமுடிகின்றது.

இரு வருடங்களுக்கு முன்பு அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுலா போனபோது செல்லுலார் சிறைச்சாலையை நேரில் போய் கண்டு அதன் அமைப்பும் அங்கு சிறைபட்டிருந்தோரின் கடுந் தியாகங்களும் இன்று எவ்வளவு குழந்தைகளுக்கு உணர வாய்ப்பிருக்கின்றது என்ற ஏக்கம் விளைந்தது.
நாம் நமது குழந்தைகளுக்கு சுதந்திரத்தின் பெருமையையும், அதற்கான நமது தியாகத்தையும், அப்படிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க நாம் கடைபிடிக்க வேண்டிய நேர்மையையும் கற்றுக்கொடுக்கின்றோமா ? என எனக்கு ஆதங்கமாக இருக்கின்றது.

மாறாக நம் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்பது எந்த இடையூறும் இல்லாமல் சமூக வலை தளங்களை உபயோகப் படுத்துவதும், எந்த தலைவரையும் எவ்வளவு கீழ்த்தரமாக இகழ கிடைக்கும் வாய்ப்புமே சுதந்திரமென பொருள்படுகின்றது.

எந்த நாட்டிலாவது அந்த நாட்டின் குடியரசு தலைவரை, அந்த நாட்டின் கொடியை, அந்த நாட்டின் தேசிய கீதத்தை அவமதிக்க முடியுமா? அதையும் சகித்துக் கொண்டு இருக்கின்ற இந்த மாபெரும் தேசத்தை நாம் மாசுபடுத்தாமல் காப்பது ஒன்றே நம் முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்குமென கருதுகின்றேன்.

ஜெய் ஹிந்த்

Thursday, 30 July 2015

தேநீர்


வாரத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால் மதிய அசைவ உணவை ஒரு பிடி பிடித்தபின் தனக்கு பிடித்தமான தனது படுக்கையில் கையில் கவியரசு கண்ணதாசனின் சேரமான் காதலியோடு விழுந்தான். நான்கு பக்கம் கூட படித்திருக்க மாட்டான். அப்படியே புத்தகத்தை தன்மேல் கவிழ்த்தபடி ஆழ்ந்து உறங்கிவிட்டான்.

சட்டென்று கண் விழித்து பார்த்தபோது மாலை 5.14 ஆகி இருந்தது. தேநீர் குடிக்கவேண்டும் போல இருந்தது. தனது மனைவியை “லக்ஷ்மி” என சப்தமிட்டு அழைக்க அவள் ஹாலில் இருந்துகொண்டே “என்ன அருண்” என குரல் கொடுத்தாள்.

“டீ வேணுமே” என பதிலுக்கு குரல் கொடுத்த அருணிடம் லக்ஷ்மி ஹாலில் இருந்தபடியே, “நீங்களே போடுங்களேன்” என பதிலிருத்தாள்
படுக்கையில் பதில் பேசாமல் சிறிது கோபத்துடன் உருண்டவன் வாரத்தில் ஒரு நாள்தான் வீட்டில் இருக்கேன், அன்னைக்குக் கூட தனக்கு தேவையானதை செய்து தர மாட்டாளோ, அம்மாவாக இருந்தால் நான் கேட்பதற்கு முன்னரே டீ வருமே என தனக்குத்தானே சலித்துக்கொண்டான்.
மேலும் ஒரு 15 நிமிடங்கள் கழிந்த பின்னர் தனக்கு வேறு வாய்ப்பில்லையென உணர்ந்து எழுந்து சமையலறை சென்று பாலை பாக்கெட்டிலிருந்து பாத்திரத்திலாக்கி கொதிக்கவைத்து டீத்தூள் இட்டு மீண்டும் கொதிக்கவைத்து வடிகட்டி இரு கோப்பைகளில் எடுத்தவாறு ஹாலுக்குச் சென்றான்.
ஒரு கோப்பையை லக்ஷ்மியிடம் கொடுக்க, புன்முறுவலோடு வாங்கிக் கொண்ட லக்ஷ்மி உதட்டில் வைத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சிய உடனே கோப்பையை டீப்பாயில் வைத்து விட்டு அருணை கைபிடித்து அருகிழுத்து கன்னத்தில் ஒரு முத்தமீந்து, “என் அன்புக் கணவனின் சுவைமிகு தேநீருக்காக. லவ் யூ டா” எனச் சிரித்தாள்.

அத்தனை அலுப்பும் சலிப்பும் அந்த ஒரு முத்தத்தில் காணாமல்போக முகமெல்லாம் மலர்ச்சியுற்ற அருணுக்கு என்றாவது தனது மனைவியின் அன்றாட அலுப்புத் தீர ஒரு முத்தம் அவள் செயலை பாராட்டி தான் தந்திருக்கின்றேனா என நினைத்தபோது சங்கடமே அவனுள் மேலோங்கியிருந்தது.

Wednesday, 29 July 2015

எங்கே எனது கவிதை


























முடிந்து போன கனாவொன்றின்
மலர்கள் பூத்த நந்தவனத்தின் மணம்
இன்று காலை பரபரப்பினிடை
மிச்சமிருந்தது

வாகனத்தின் முன்பாக
அசைந்து சென்ற காளையின் கொம்பில்
நேற்றிரவின் பனித்துளியொன்று
படிந்திருந்தது

தெருவிளக்கின் அடியில் நின்ற
தெரு நாயின் பற்களுக்குள்
பழச்சுவை கனிந்து
கலந்திருந்தது

விரலிடுக்கில் கனன்ற கங்கிலிருந்து
உதிர்ந்த சாம்பலினுள்
அந்நேரம் அணையத் தொடங்கிய நெருப்பு
மினுக்கியிருந்தது

உனது நினைவுகளில் மட்டுமே
உருவான எழுத்துக்கோர்வை மட்டுமேன்
இப்போது எனைவிட்டு
நீங்கியிருந்தது?

Monday, 27 July 2015

மாமனிதர் மறைந்துவிட்டார்

தற்புகழ்ச்சி கொள்ளாத
தன்பெருமை பேசாத
தன்னை முன்னிலை படுத்தாத
தன் செயல்களாலும்
தூய எண்ணங்களாலும்
போற்றப் படும் நிலைக்கு உயர்ந்த மாமனிதர்
தொலை நோக்குப் பார்வையை
இளையோர் எண்ணங்களில் விதைத்து
நம்பிக்கை கரங்களை வலுப்பெறச் செய்து
எதிர்காலம் நமதென்று
புகழ்பரணி பாடச் சொன்னவர்
கண்ணடைத்து உறங்குகையில்
காண்பதுவே கனவென இருந்தோரை
கண்மூட அனுமதியா உணர்வுகளே கனவென்று
புது வடிவம் தந்தவர்
வானேறி புக்க
திறனுண்டு உனக்கென்று
தோள்தட்டிச் சொல்லி
நிகழ்த்தியும் காட்டியவர்
சோறுண்ணும்போது மரிக்கவில்லை
சுகித்திருக்கும் போது மரிக்கவில்லை
உறக்கத்தின் மடியில் இறக்கவில்லை
உடல் நோயால் வாடிக் கிடந்து இறக்கவில்லை
தனக்கு மிகவும் பிடித்த செயலான
இளைய தலைமுறையுடன் அளவளாவும் போது
தன்னுயிர் இழத்தல் எத்தனை புண்ணியம்
வாழ்ந்தால் இவரைப் போல் வாழணும்
இறந்தாலும் இவரைப் போல இறக்கணும்
வாழ்க எம்மினத் தலைமகனே
எம்மில் என்றும் தரமான எண்ணங்களால் வாழ்பவனே.....!

எது வாழ்க்கை



















உருகிய அந்தகார இருட்டின்
ஓரொரு துளியும்
வழிந்தச் சுவட்டில்
வலம் வரவா எந்தன் சிறகிழந்த கனவுகள்

துளையிட்ட பாறையில்
வெடிவைத்த பின்னர்
தகர்ந்தெழும் துகள்களினாலான
பூத்தூவலா எந்தன் வானம்

ஆதி யிரைச்சலும்
அண்டம் புரண்ட
பேரோசையின் கூச்சலும்
ஒன்றிணைந்து இசைத்ததா எந்தன் கானம்

அனலும் மணலும்
அருகிப் பெருகி
உருகி ஒன்றென உதிர்ந்த
உப்புக் கரைசலின்
சுவையூட்டலா எந்தன் சோமபானம்

தொட்டுத் தொடர்தலும் முடிவாகி
விட்டுக் கொடுத்தலே விடையாகி
எனை விட்டுக் கொடுத்தபின்
நீயுமெனை விட்டுக் கொடுத்ததனால்

விடையற்ற நாட்களும்
வினாவற்ற நிகழ்வுகளும்
ஒரு சேர
பரிதவிப்புடன் வரையப்பட்ட
படபடத்த பக்கங்களின் திருப்புதலா
என் வாழ்க்கை…..

Thursday, 25 June 2015

பாலைவன மணற்துகள்
















பரந்து கிடந்த பாலைவனப் பரப்பில்
சுடுமணற்துகளை ஒவ்வொன்றாயெடுத்து
பத்திரப் படுத்திக்கொண்டிருந்தேன்

பொறுமையிழந்து இருகைகொண்டு
வாரியெடுக்க முனைகையில்
விரலிடுக்குகளில் வழிந்தவையே யெந்தன் கவனமீர்க்க
எஞ்சியவை சட்டென அடித்தப் பெருங்காற்றில்
சிதறிப் போயின

ஓரிரண்டுத் துகள்கள்
விழி நுழைந்த உறுத்தலில்
துளிர்த்தத் துளிகள்
பாலையை நனைக்கக்கூடுமோவென அஞ்சினேன்

ஆங்கு அவள் தொலைவில்
நடந்து வருகையில்
கானலெனத் தோன்றி
அடுத்து வர உதவுமோவெனவும்
ஏங்கினேன்

விடையறியா கேள்விக்குள் நான் வீழ்ந்திருக்க
வினாக்களை மட்டுமே சுமந்த அவள்
வருவாளா

விடை பகர்வாளா?