Tuesday, 16 December 2014

கேள்வி




















சுழன்றடித்த பேராசை சூறைகாற்றில்
அகப்பட்ட மேகத் தூவல்களை
மென்மையென மெத்தனமாய் நினைத்திருக்க
அவையோ கடுங்கோபக் காற்றாய்
கபளீகரஞ்செய்யத் துடித்தது கண்டு

நங்கூரமிட்ட மனக்கால்களை
நாற்புற நதியலைகளில் மூழ்கவிடாமல் நிறுத்தி
நல்லெண்ணக் கரங்கொண்டு
சுழல்காற்றைப் பற்றிச் சுழற்றிவிட

அகண்டு விரிந்து
கட்டுத்தளையறுத்து
கைப்பற்றியிருந்த கள்ளத்தனங்களை
வான்மழையில் கரைத்து
உதிர்க்கத் தொடங்கியது

மேல்விழுந்த துளிகளில்
ஒன்றிரண்டு கண்ணீர் முத்துக்களுடன்
பொறாமைப் புழுதியும் கரைந்திருக்க

மாசுடுத்திய மாண்பு கொண்டு
மாய்க்கத் துடிப்பவைகளை
வாழ்த்துப் பாசுரம் படிப்பதா
வெறுத்துப் பழிப்பதாவென

கேள்வியிலாழ்ந்தேன்

மரணமென்றது

















பரந்து விரவிக் கிடந்தவொன்று
கருவென்று உடலுடுத்தி பிறப்பென்றது

உணர்வுருவின் வசமாகி சுயமிழந்தது
உறவுகளின் பிணைப்பில்
திளைத்து நின்று சுகமென்றது

உற்றவை பெற்றவை
கற்றவை கொண்டு
வெற்றியென்றது

இழந்த நொடித்த
பதறிய சிதறிய கணங்களில்
துயரென்றது

சலிப்புற்று ஓர் நாள்
உடலுடைவுதறியெறிந்து
புறப்பட்டு
உலவுதலற்ற உறைதலாய்
நிலைத்தன்மை கண்டுவிடயேன்

மரணமென்றது..

உணவரங்கம்


                        அந்த உணவரங்கத்தில் அமைதி நிலவியது. நானும் எனது மூன்று நண்பர்களும் சேர்ந்து இரவு உணவுண்ண சென்றிருந்தோம். எங்களுக்குத் தேவையான உணவு பதார்த்தங்களை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது அருகாமை மேசையில் ஒரு வயதான தம்பதியினர் வந்து அமருவதைக் கண்டோம்.
                        வந்து அமர்ந்ததும் அருகில் வந்த வெயிட்டரிடம் தங்களுக்குத் தேவையான ஐட்டங்களை இரண்டிரண்டாக ஆர்டர் செய்தனர். சிறிது நேரத்தில் எங்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது அந்த முதிர்ந்த தம்பதியினருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
                          இரண்டு பேருக்கும் உணவு வழங்கப்பட்டபோதும் அந்த பெரியவர் உணவுண்ணுவதை பார்த்தவாறும், தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தவாறும் அந்த முதிய பெண்மணி உணவுண்ணாமல் இருந்தார்.
                         எனக்கோ பொறுமையின்றி எழுந்து சென்று, அம்மா, உங்களுக்கும் உணவு வழங்கப்பட்டுவிட்ட்து. அது சூடு ஆறுவதற்குள் நீங்களும் உண்ணலாமே, ஐயா உணவுண்டு முடிக்கும்வரை ஏன் காத்திருக்கின்றீர்கள்? எவ்வளவு பாசமானாலும், உணவை ஏன் காத்திருக்கவைக்கவேண்டும் என்று கேட்டேன்.

                       அதற்கு அந்த பெண்மணி பொறுமையாக என்னைப் பார்த்து சொன்னார், எனக்கு அவருடைய பல்செட் வேண்டும்?

ரட்சிப்பாயா
















நினைவுகளில் நீ நிதம்
புதிதாய் பூத்துக்கொண்டேயிருக்கிறாய்

நிச்சலனப் பொழுதுகளின் காது மடல்களை
நீவி விட்டுக்கொண்டுமிருக்கின்றாய்

நாசியரும்புத் துளைகளில்
நறுமணத் தென்றல் வீசுகிறாய்

கடுங்கோடையின் காலை வெம்மைகளில்
கற்பனை சாமரம் வீசுகின்றாய்

நிழல் தேடுமென் நேரப் பங்கீடுகளில்
நீளப் பந்தலிடுகிறாய்

இருந்துமெனை அவ்வப்போது
உலர் உதடுகளால் உச்சாடனம் செய்கிறாய்

கனல் பார்வைகளால்
களி நடனம் புரிகின்றாய்

எனது ஏக்கமும் தாக்கமும் நீயாக
இதயக் கூறுகளில்
இருவேறு உணர்வுகளும் படிய

இயல்பினை மீட்க வழியின்றி
உன்னிடமே சரணாகின்றேன்

ரட்சிப்பாயா

பொக்கிஷம்















நீ கொடுத்த புத்தகத்தின்
எழுதாத பக்கத்தில்
எனது விழிகளமர்ந்து கொள்ள
இறக்கைகள் விண்ணில் பறக்கத் தொடங்கின

நொடிக்குள் ஓராயிரம் வார்த்தைகளைப் பிரசவித்து
ஒட்டி வைத்து அழகு பார்க்க
உணர்வலங்காரத் தேரோட்டம் ஆரம்பமானது

மலர்வனத் தோட்டமாய்
மந்தகாசம் வீசத் தொடங்கிய பக்கம்
அழுக்காறும், விகாரமும் கொண்ட
அவன் பார்வையில் மட்டும்
நச்சுப் பாம்புகள் குடிகொண்டிருப்பதாகத் தோன்ற

புத்தகம் கைமாறாது
பாதுகாப்பதே போராட்டமாக
பொக்கிஷமாய் கொண்டு
பூமிக்கடியில் புதைத்து வைத்தேன்,
என்றேனு(று)ம் நான்

எடுத்து வாசிக்கவேண்டுமென…!