Wednesday, 16 October 2013

பொன் வண்டு















வெளிச்சப் பூக்களை
நீர் முத்துக்களுடன் கோர்த்து
மேனியில் சிதற விட்ட
பச்சை இலை.

மழைத் துளியின்
கனம் கண்டு
மனம் நொந்து
இலைக்கடியில்
தவமிருந்த
பொன் வண்டு.

தீரா மழையும்
தீர்ந்து போக
வலம் வந்து
மழைக்கும்,
காற்றுக்கும்,
இலையசைந்தும்
தான் விலகாக் காதலுடன்
இலை பற்றி
வீற்றிருக்கும்

என் வண்டு!

வார்த்தைகள்



வார்த்தைகள்
குளம்படி பட்ட மணலாய்
எழுந்து படர்ந்து
எங்கோ மறைந்தது..!

எங்கே?




எங்கோ இழந்ததை
எங்கோ தேடுவதே

வழக்கமாகப் போய்விட்டது...!

அமைதி


தெருவோர சப்தங்கள்
திகைப்பூட்டவில்லை.

கடலலையின் சீற்றமும்
வியப்பூட்டவில்லை.

வான் வெளியின் வண்ணங்கள்
எனை மயக்கவில்லை.

சுற்றுமிந்த பூமியின்
சுழல் நினைவிலில்லை.

மகரந்த பூக்களின்
மணம் மயக்கவில்லை.

ஆழ்மனத்தில் நிலவும்
அமைதி கண்டு
பார்வையை உள்ளிருத்தி
பயந்துபோய் பார்த்தேன்.


தேடுதல் அற்று
திசைகளும் மறந்து
வாட்டங்கள் தொலைத்து
வெற்றிடம் நாடி
ஆழ்கடல் அமைதியில்

என் மனம்!

மகிழ்ச்சி


மறந்திடல் மகிழ்வு என்றாய்,

நீ மகிழ்வதில் மகிழ்ச்சி என்றேன்.

குழந்தை




கதை படிப்பதில்
ஆர்வமுள்ள குழந்தை,
பள்ளிப்படைப்பில்
நாட்டமின்றி,
கவலையுடன் தாய்
கதைகளை பறித்து
எரித்துவிட்டாள்.
கண்ணீருடன் குழந்தை...!

Wednesday, 2 October 2013

வாடகை வீட்டிலோர் வர்ண திரைச்சீலை


வாடகை வீட்டிலோர் வர்ண திரைச்சீலை

தென்றல் காற்றின் வரவை
தவழ்ந்தே உணர்த்தியது,
வெள்ளை வண்ணத்தில்
கரு நீல பூக்களும்,
அவற்றை மொய்த்தவாரே
வண்ணத்தை தெளித்தவாறே
வண்ணத்துப்பூச்சிகளும்,

பல நேரம்
மின்காற்றின் வேகத்திற்கும்
ஈடு கொடுக்கும்,
மழை பொழியும் காலங்களில்
சாரலை தாங்கி நிற்க
தாவி சென்று
சாளரங்கள் அடைக்கப்படும்.

உறுத்தாத வண்ணத்தில்
உள்ளத்தை கவர்ந்திட்ட
மென்மை இதயமாய்
உள்வீச்சையும்,
வெளி வீச்சையும்
ஈரக் காற்றையும்,
வெப்பக் காற்றையும்
தன்னகத்தே
வாங்கி நிற்கும்!

வந்தோரின் பார்வைக்கும்
மகிழ்வினையே காட்டி,
அகத்தே உள்ளோரின் மனதிற்கும்
இதமளிக்கும் திரைச்சீலை.

வாடகை வீட்டை
மாற்றும் நிலை வந்தது.
புதிய வீட்டிலோ
சாளரங்களில்லை.
எங்கும் அடைபட்டு
மூச்சு முட்டும் வாழ்க்கையில்
திணறியபடி....!

இனியந்த
அழகிய திரைச்சீலைக்கு
என்ன வேலை?
அழகாய் மடிக்கப்பட்டு
அடுக்கில் புதைக்கப்பட்டது!

இனி,
அடுத்த வாடகை வீட்டிலாவது
சாளரங்கள் இருக்கவேணுமென
மனம் கெஞ்சியது!